Friday, November 13, 2009

எனது முகவரி

எனது சொந்த கிராமமான குளிப்பட்டியை உலகுக்கு அறிமுகப்படுத்துவதில் பெருமையடைகிறேன்.

குளிப்பட்டி எனக்குப் பெயர்காரணம் தெரியவில்லை, ஒரு சில பெரியவர்களிடம் கேட்டு சரியான பதில் கிடைக்காததாலோ என்னவோ அதற்குமேல் ஆராயவில்லை.

இது திண்டுக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ள தமிழகத்தின் இரண்டாவது பெரிய காய்கறி தரகு மையமாகவுள்ள ஒட்டன்சத்திரம் (திண்டுக்கல்-பழனி சாலையில் மையத்தில் உள்ளது)பகுதியில், அதற்கு வடகிழக்கே கரூர் சாலையில் 13 கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது.

இப்பொழுது குளிப்பட்டி என்பது பெரியகுளிப்பட்டி, சின்னக்குளிப்பட்டி என்ற இரு ஊர்களின் தொகுப்பு ஆகும். ஆனால் குளிப்பட்டியானது சாலையிலிருந்து 1கி.மீ தூரம் உள்ளதால், சாலைஅருகில் கடையாகத் தோன்றியது பின்னர் ஊராக மாறியதால் அதையும் குளிப்பட்டி என்றே அழைத்தனர். ஆகவே குளிப்பட்டி பெரியகுளிப்பட்டியாகவும், புதிய குளிப்பட்டி சின்னக்குளிப்பட்டியாகவும் மாறியிருக்கிறது.


நாம் பேருந்திலிருந்து இறங்கி, மேற்குநோக்கி நடந்தால் முதலில் தாழையாறு (நங்காஞ்சியாற்றின் துணையாறு)வரும், அதைக் கடந்து சென்றால் (ஆற்றில் நீர் என்பது வங்காளத்தில் புயல்சின்னம் உருவாகி, அதனால் பெருமழை பெய்தால் மட்டுமே காண முடிந்த ஒன்று) உழைத்தவர்கள் உறங்குமிடம் (தகன மன்றம் என்ன தமிழ்ப் புலமை)வரும். அதையும் தாண்டிச்சென்றால் ஊரின் நினைவுச் சின்னங்களில் ஒன்றான பெரிய ஆலமரம் வரும் (அந்த மரத்தடியில் சிறிய பாறை மட்டுமே இருக்கும் அதில் அமர்ந்து மரத்தின் அழகை ரசிக்கலாம்).மேலும் சிறு தூரம் சென்றால் ஊரின் தலைவாசல் இருக்கும். அங்கு நின்று கொண்டு நேரே பார்த்தால் மேநிலை குடிநீர்தொட்டி, பக்கத்தில் சாவடி (ஊர் கூடுமிடம்), அதன் பக்கத்தில் ஊர் பண்ணாடிசிலை (முன்னாளில் முக்கியமுடிவுகளை எடுத்தவர்) அதற்கு வலதுபுறம் பெறிய பாறையாலான மேடை போன்ற அமைப்பு. பக்கத்தில் பயணிகள் குடை அதனருகில் சமுதாயக்கூடம், பக்கத்தில் நியாயவிலைக்கடை அதனருகில் நடுநிலைப்பள்ளி (நான் 8-ம் வகுப்புவரை படித்ததும், 8-ஆம் வகுப்பு பயிலும்போது பள்ளி மாணவத்தலைவனாக இருந்ததும்....) அருகில் கலைக்கூடம் அதன் வலது பக்கம் ரெட்டியம்மன் கோவில் (ஊரின் முக்கிய தெய்வம்) அதன் பக்கத்தில் நமது வினாயகர் ஆலயம் அதன் வலபுறதில் மேல்நிலைத்தொட்டியென கிட்டத்தட்ட 360 டிகிரியில் கட்டடங்களிலான ஊரின் முகப்பு.


இது இன்றைய நிலை, அதுவும் பத்து ஆண்டுகளில் ஏற்பட்ட மாற்றம் மட்டுமே...

அதற்கு முன்னர் குளிப்பட்டி என்றால் பேருந்து நிறுத்தத்தில்(சின்னக்குளிப்பட்டி) மேற்கூறிய ஆலமரத்தைவிட பெரிய ஆலமரம்தான் நினவு வரும். அது ஒவ்வொரு வருடமும் பழனிக்குப் பாதயாத்திரை வருவோர் இளைப்பாரும் மடமாகவே இருந்து சிறப்பித்தது. ஆனால் 1996 இல் ஏற்பட்ட புயலில் அது வேரோடு சாய்ந்துவிட்டது. இப்பொழுது அந்த இடத்தில் ஊரின் முக்கிய கோயிலின் நுழைவாயில் ஒன்று எழுப்பப்பட்டிருக்கிறது.

ஊரின் தலைவாசலில் (முகப்பில்) எப்பொழுதும் பெரியவர்கள் சிறியவர்கள் என அவரவர் நண்பர்கள் சகிதம் ஆங்காங்கே கூடுவது வழக்கம். ஆனால் இன்று இளைஞர்களை அங்கு காணவேண்டும் என்றால் ஏதேனும் பண்டிகை அல்லது திருவிழா போன்ற சிறப்பு நாட்களில் மட்டுமே முடியும். ஏனெனில் அனத்து இளைஞர்களும் தொழில், வேலை என்று பல்வேறு நகரங்களுக்குச் சென்றுவிட்டனர் (நான் கூட). இடைப்பட்ட நாளில் காண இயலாது, இது என் ஊர் மட்டுமல்ல கிட்டத்தட்ட எல்லா ஊரின் நிலையும் அதுதான்.

இவ்வளவு பெரிய ஊரின் முக்கியத் தொழிலான விவசாயம், இன்று ஊரில் உள்ள பெரியோரால் மட்டுமே நடைபெறுகிறது. மொத்தமாக 20-35 வயதுடைய இளைஞர்கள் யாரையும் ஊரில் காண்பது அரிது (பண்டிகை நாட்கள் தவிர).

ஒரு ஊரில் இளைஞர்களே இல்லை என்பது எவ்வளவு வேதனையானது என்பதை எண்ணிப் பாருங்கள். இந்த மாதிரியான நிலைக்கு என்ன காரணம்????



மீண்டும் சந்திப்போம்!!!

2 comments:

  1. நானும் பெரியகுளிப்பட்டி தான்

    ReplyDelete