Tuesday, November 16, 2010

இலவசம் - பேராசிரியரின் பார்வையில்

நக்கீரன் இதழுக்கு மாண்புமிகு நிதியமைச்சர் பேராசிரியர். அன்பழகன் அளித்தபதிலில் இருந்து...

நக்கீரன்: இலவசத் திட்டங்கள் மூலம் மக்களை சோம்பேறிகளாக்குவதாக சிலஅறிவுஜீவிகள் கூறுகிறார்களே?

பேராசிரியர்: இல்லாதாருக்கும், இயலாதாருக்கும், வாய்ப்பு வசதி அற்றோருக்கும் துணையற்றவருக்கும், கதியற்றவருக்கும் பயன்படவே ""இலவசம்''. அவர்கள் உழைக்காதவர்களோ, உழைக்க மறுப்பவர்களோ, உழவையும், உழைப்பையும் இழிவாக எண்ணுபவர்களோ அல்ல.

தலைமுறை பலவாக உழைத்து வாழும் குடும்பங்களில், ஒவ்வொரு வகையில் அவர்தம் வாழ்வில் மகிழ்ச்சி விளையவும், ஓய்வில் உற்சாகம் தோன்றவும், அவர்களது உழைப்பு நிறைவான பலன் விளைவிக்கவும் ஏதுவாகவே இலவசங்கள் அளிக்கப் படுகின்றன. தக்க காரணகாரிய விளக்கமின்றி இலவசங்கள் வழங்கப்படவில்லை. வண்ணத் தொலைக்காட்சி பெட்டி -ஏழை வீட்டினர் பொழுதுபோக்குக்கும், பொது அறிவு வளர்ச்சிக்கும் பயன்பட.

கியாஸ் அடுப்பு இணைப்புடன் வழங்குவது, எரிபொருளாக விறகு பயன்படுவதைத் தவிர்க்கவும், சுற்றுச் சூழல் செம்மையுறவும், தாய்மார்கள் அடுப்பூதும் தொல்லை தவிர்த்திடவும் உதவுகிறது.

கருவுற்ற தாய்மார்கட்கு -மகப் பேறு எய்துவதற்கு முன்னும் பின்னு மாக 6 மாதங்களுக்கு ரூ.6000 உதவித் தொகை அளிப் பது, அவர்கள் வயிற்றில் வளரும் சிசு, ஊனமோ, உடல்-மூளை வளர்ச்சிக் குறையோ எய்தாமல், நோய் நொடி வாராது தடுக் கும் நோய் எதிர்ப்பு சக்தியுடன் பிறப்பதற்காக.

திருமண உதவித் தொகை ரூ.25,000 ஒரு ஏழை குடும்பத்தில் பிறந்து வயது வந்த பெண்ணுக்கு வாழ்வு கிடைக்கவும், பெற்றோரின் பெருங்கவலையை மாற்றவுமே அது மறைமுகமாக- தற்கொலைகளையும், ஏக்கத்தையும் தவிர்க்கிறது. முதியோருக்கு, விதவைகட்கு, மாற்றுத் திறனாளிகட்கு வழங்கும் உதவித் தொகைகள்- அவர்களின் அன்றாட உணவுக்கு உதவ.

அங்கன்வாடியில் சேய்கட்கும், பள்ளிகளில் மாணவர்கட்கும் சத்துணவு, வாரம் 5 முட்டை அல்லது வாழைப்பழம் ஆகியவை இலவசமாக வழங்குவது வருங்காலத் தலைமுறை, நோய் நொடிக்கும் பெரும் பிணிக்கும் ஆளாகாமல் வாழச்செய்வதற்காக.

முதியோருக்கு இலவச வேட்டி, புடவை - அந்த ஏழைகளின் மானம் காத்திட, சமுதாயத்தில் அவர்கள் தன்மானத்துடன் உலவத் தரப்படுகிறது.

படிக்கும் மாணவ- மாணவியருக்கு பள்ளிக் கட்டணம் இல்லை. புத்தகம் இலவசம். தேர்வுக் கட்டணமும் இல்லை. இலவச மிதிவண்டி, இலவச பேருந்து பயணம். ஆதிதிராவிட பிற்பட்ட, மிகவும் பிற்பட்ட மாணவர்கட்கு இலவசமாகத் தங்கிப் படிக்க விடுதிகள் ஏற்படுத்துவது அடித்தட்டு மக்கள் வாழ்க்கை நிலையை உயர்த்தவே.

பொதுமக்கள் உயர்தர சிகிச்சை பெற வழிசெய்ய வேண்டி கலைஞர் உயர்சிகிச்சை உயிர் காப்பீட்டுத் திட்டம். ஒண்ணே முக்கால் கோடி குடும்பங்களில் வாழும் ஒவ்வொரு உறுப்பினரும் 4 ஆண்டுகட்கு ஒரு முறை, 1 லட்ச ரூபாய் அளவிற்கு சிகிச்சைக்கு உதவி பெறலாம்.

தமிழ்நாடெங்கும் 108 ஆம்புலன்ஸ் திட்டத்தில் முன்னூறு வண்டிகள் ஓடுகின்றன. எந்த ஊரெனிலும் மக்கள் ஆம்புலன்சை அழைத்தவுடனே வந்து, அவசர சிகிச்சை கிடைக்க கட்டணமில்லாமல் உதவுகின்றது. ஏழை, எளிய மக்கள் 108 அர்ச்சனை செய்பவர்க்கு ஆண்டவனே வந்து உதவுவது போன்று, 108 ஆம்புலன்ஸ் வண்டி வருவதாகக் குறிப்பிட்டு மகிழ்கின்றனர்.

அனைவருக்கும் தைப் பொங்கலுக்கு பொங்கல் பொருள்கள் யாவும் இலவச மாக வழங்கப்பட்டது - தமிழர்கள் அனைவருக்கும் பொங் கல் இன்பம் வாய்த்திட.

இந்த இலவசங்கள், மூன்று வேளையும் இலைவிரித்து உணவருந்தி, அஜீரணத்திற்கு மருந்து சாப்பிடும் வர்க்கத்தாருக்குச் செய்யும் தானம், தருமம் போன்ற முறையைச் சேர்ந்தது அல்ல. அதனால் இது சோம்பேறிகட்கென்று ஏற்பட்ட திட்டமுமல்ல, சோம்பேறியாக வாழ்வதற்கு வழிசெய்யும் திட்டமுமல்ல.

தமிழக அரசின் இலவச திட்டங்கள் பல, அனாதைகட்கும், அபலைகட்கும் வாழ்வளிக்கும் திட்டமாகும். உயிர் வாழ்வதில் வெறுப்படையாமல் நம்பிக்கைகொள்ளச் செய்யும் திட்டங்களாகும்.

ஒவ்வொரு இலவச திட்டமும், ஒட்டுமொத்த சமுதாயத்தின் வாழ்வைச் செழிக்க வைப்பது. இந்த இலவசத்திற்காகச் செலவிடும் தொகை அளவுக்குக் கிடைக்க வேண்டிய உடனடி பலன் மட்டுமன்றி, நீண்டகாலத்திற்குப் பல நற்பலன்களைச் சமுதாயத்திற்கு விளைவிக்கிறது.

அதனை சொல்லிக்கொண்டே போகலாம்.

நன்றி: நக்கீரன்.காம்

No comments:

Post a Comment